|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, November 12, 2006

சதாம் ஹுசைன் - அடிபணிய மறுக்கும் துணிச்சலின் சின்னம்!!

புஷ்ஷுக்கு வெற்றி இல்லை; சதாமுக்கு தோல்வி இல்லை!

இறுதியில் இயற்கை சமநிலை கண்டிருக்கிறது. ஜார்ஜ் புஷ்ஷுக்கு, இராக்கிய மக்களால் எதைச் செய்ய முடியவில்லையோ அதை அமெரிக்க மக்கள் செய்து முடித்திருக்கிறார்கள். சரத் பவாருக்கு, இந்திய விவசாயிகளால் எதைச் செய்ய முடியவில்லையோ அதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள். மன்னர் ஞானேந்திராவுக்கு, முன்னாள் மன்னர் கரண் சிங்கால் எதைச் செய்ய முடியவில்லையோ அதை நேபாள மக்கள் செய்திருக்கிறார்கள். இறுதியில் ஏல்லாம் நன்றாக நடந்திருக்கிறது.

அமெரிக்க வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, சதாம் ஹுசைனுக்கு இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்து மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை. புஷ் ஒரு முரட்டுப் போர்த் தலைவர் என்பதால், பயங்கரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க அவரது தலைமை அவசியம் என்பதுதான், புஷ்ஷை முன்னிறுத்துவதற்காக செய்யப்படும் பிரசாரம். இராக்கின் கொடுங்கோலரை (?!) நீதிக்கு முன் கொண்டு வந்து நிறுத்தியவரும் இந்த முரட்டுப் போர்த் தலைவர்தான் என்று பேசப்பட்டது. பிறகு எப்படி அமெரிக்க வாக்காளர்கள் அவருக்கு வாக்களிக்கத் தவறினார்கள்?

இராக் போரில் பலியான 2,800 அமெரிக்கப் படைவீரர்கள்தான் இந்தக் கணக்கைப் புரட்டிப் போட்டுவிட்டனர். மேலும் 20,000 அமெரிக்க வீரர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களாகப் பலர் வீடு திரும்பி இருக்கிறார்கள். இவைதான், அமெரிக்க மக்களால் சகித்து ஏற்றுக் கொள்ள முடியாத புள்ளி விவரங்கள். பத்தாயிரக் கணக்கில் வியட்நாமியர்களும், இராக்கியர்களும் கொல்லப்பட்டால், அவர்களுக்கு அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால், ஓரேயொரு அமெரிக்கப் படைவீரரின் சடலம் சவப் பையில் கிடத்தப்பட்டு நாடு திரும்பினால்கூட பாவச் செயல் எனப் பதைக்கிறார்கள். அந்தப் பாவச் செயலுக்கு அமெரிக்க அதிபர்கள் விலை கொடுக்க நேரிடுகிறது.

இராக்கில் அவர்கள் சிறைப்பிடித்த கொடுங்கோலருக்கும்(?!), அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இறுதியாக நிரூபிக்கப்பட்டபோது, அது மன்னிக்க முடியாத ஒன்றாக இருந்தது. அந்தக் கொடுங்கோலரிடம்(?!) நாகரிகமான ஒரு பேரழிவு ஆயுதம்கூட இல்லை. மேலும் அவர் ஓசாமா பின் லேடனுக்கு எதிரியும் ஆவார்.

சதாமுக்கு வைக்கப்பட்ட குறி, அவர் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்தார் என்பதற்காக அல்ல, மாறாக பெட்ரோலிய கச்சா எண்ணெய் வளம் தொடர்பான அமெரிக்க நலன்களுக்கு அவர் எதிரியாக இருந்தார் என்பதுதான். அமெரிக்க டாலருக்குப் பதிலாக யூரோ நாணயத்தை, இராக்கின் எண்ணெய் வர்த்தகச் செலவாணியாக அவர் மாற்றியபோதே, துணை அதிபர் டிக் செனி தலைமையிலான அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள், சதாமுக்கு முடிவு கட்டத் தீர்மானித்து விட்டார்கள். பயங்கரவாதத்துக்கு எதிரான போருடனோ, சதாமின் கொடுங்கோன்மையுடனோ, ஜனநாயகத்தைப் பரப்பும் அமெரிக்க லட்சியத்துடனோ இராக் போருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒரு வியாபார யுத்தம்.

விசாரணைக்கு உள்ளாக வேண்டியவர் டிக் செனிதான். டொனால்டு ரம்ஸ்பெல்டு வெறும் பைத்தியக்காரர். ஆனால் டிக் செனியோ, அரசுப் பதவியை தனிப்பட்ட லாபத்துக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்தும் சூழ்ச்சிக்காரர். அவரது பதவிக் காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. ஜனநாயகக் கட்சியின் ஆதிக்கத்தின் கீழ் வர இருக்கும் அமெரிக்க நாடாளுமன்றம், டிக் செனியிடம் இருந்து உலகைப் பாதுகாக்குமா என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியாது.

இன்னும் அதிகாரத்தில் இருந்தபோதிலும், புஷ்ஷும், செனியும் தோல்வியின் சின்னங்களாக மாறிவிட்டனர். தலைக்கு மேலே தூக்குக் கயிறு தொங்கிக் கொண்டிருந்த போதிலும், சதாம் ஹுசைன், தேசியப் பெருமையின் சின்னமாக, அடிபணிய மறுக்கும் துணிச்சலின் சின்னமாக விளங்குகிறார். எனவே, என்றென்றைக்குமான அந்தக் கேள்வி இங்கே மீண்டும் எழுகிறது: வாழ்க்கை எனும் பெரும் விளையாட்டில் வென்றவர் யார்? தோற்றவர் யார்?

சரத் பவார் நிச்சயமாக வெற்றியாளர் இல்லை. விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படும் போது, அவர் கவலைப்படுவதாகத் தோன்றவில்லை. மேடையில் இருந்து அவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் முரட்டுத்தனமாக தள்ளிவிட்டபோது, அதற்கு அவர் ஏதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. நிர்ப்பந்தம் கொடுத்த பிறகே அதை அவர் செய்தார். இந்திய கிரிக்கெட் அணிக்குச் சுமையாக இருக்கும் ஆஸ்திரேலியர் சாப்பலை, பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சரத் பவாரால் தள்ளி விட முடியாமல் இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

இங்கேதான், நமக்குக் கற்றுக் கொடுக்க நேபாளிகளிடம் ஏதோ இருக்கிறது. மன்னர்களாலும், ராணாக்களாலும் பல தலைமுறைகளாக ஒதுக்கித் தள்ளப்பட்ட நேபாள மக்கள், இப்போது மன்னராட்சியை வரலாற்று அருங்காட்சியகத்துக்குள் ஒதுக்கித் தள்ளி இருக்கிறார்கள். ''மாவோயிஸ்டுகள்'' என்ற மிகவும் விவேகமற்ற முத்திரை ஒட்டிக் கொண்டிருந்த போதிலும், மெய்யாகவே அது மக்கள் புரட்சிதான்.

பிரசண்டனின் தலைமையிலான இயக்கம் மாவோயிஸ்ட் இயக்கம் அல்ல. ஏனெனில், பெயரளவுக்குக் கூட ஆயுதங்களை ஒப்படைப்பதையோ, மற்ற அரசியல் குழுக்களுடன் இடங்களைப் பகிர்ந்து கொள்வதையோ அந்த அசல் மாவோ ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார். இந்த அம்சங்களில் நேபாளிகள் உடன்பாடு கண்டிருப்பது, நீண்ட நாட்களாக துன்பத்தில் உழலும் நேபாளத்தில் ஒரு புதிய விடியல் தோன்றியிருப்பதைக் காட்டுகிறது.

நல்லவேளை, நேபாளத்தில் எண்ணெய் வளம் இல்லை. இருந்திருந்தால், அங்கேயும் ஜனநாயகத்தைப் பரப்ப அமெரிக்கா துடியாய்த் துடித்திருக்கும்.

டி.ஜே.எஸ்.ஜார்ஜ், தமிழில் : ஆர்.நடராஜன்
நன்றி - தினமணி

0 Comments:

Post a Comment

<< Home