|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, August 18, 2007

ஒரு முஸ்லீம் காந்தியைக் கொன்று விட்டான்


1948-ஜனவரி 30, பார்ப்பன கொலை வெறிக்கு காந்தியார் பலிகடா ஆனநாள் அதுதான்!

புதுடில்லியில் உள்ள பிர்லா மாளிகையில் தனது அறையிலிருந்து காந்தி புறப்பட்டார். அதுவரை சர்தார் வல்லபாய் பட்டேலுடன் பேசிக் கொண்டிருந்தவர், பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டது என்று பட்டேலிடம் விடை பெற்றுக் கிளம்பி, பிரார்த்தனை மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். காந்தியாரின் பேத்தி 'ஆவா காந்தி' மருமகள் 'மனுகாந்தி' ஆகியோர் தோள் கொடுக்க தோட்டத்தைக் கடந்து பிரார்த்தனை மேடைக்கு வந்தார். மண்டபத்தை அடைய இன்னும் நான்கு அடிகளே எடுத்து வைக்கவேண்டும். 500 பேருக்கும் மேல் கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. அப்போது கூட்டத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு 35 வயதுடைய இளைஞன் ஒருவன் வந்தான்.

தனது உடலை வளைத்து குனிந்து, 'பிராணம் (சல்யூட்) செய்தான். காந்தியார் திருப்பி மரியாதை செலுத்தினார்.

'இன்று பிரார்த்தனைக்கு நேரம் ஆகிவிட்டது அல்லவா?' என்று கேட்டான்.

காந்தியார் சிரித்துக் கொண்டே 'ஆம், நேரமாகிவிட்டது.' என்றார்.

உடனே துப்பாக்கியை எடுத்தான். காந்தியாரை நோக்கி மூன்று முறை சுட்டான். காந்தியார் வயிற்றுக்குக் கீழேயும், இதயத்துக்குக் கீழேயும் குண்டுகள் துளைத்துச் சென்றன. காந்தியார் குலைந்து போனார். ஆவா காந்தியும், மனுகாந்தியும் அழுத்திப் பிடித்துக் கொண்டனர். அப்போது நேரம் மாலை 5 மணி 12 நிமிடம்! காந்தியார் மூச்சை இழந்தார்.

அதற்குமுன் ஜனவரி 15-ம் தேதியிலிருந்து வகுப்புக் கலவரங்களை எதிர்த்து தொடர்ந்து 'உண்ணா விரதம்' இருந்த காந்தியார் சில நாட்களுக்கு முன்புதான் உண்ணா விரதத்தை முடித்திருந்தார்.

காந்தியாரை சுட்டுக் கொன்றவனை கூடியிருந்தவர்கள் வளைத்துப் பிடித்தனர். ஆத்திரமடைந்த கூட்டத்தினர் அவனை அடித்துக் காயப்படுத்தினாகள். போலீசார் அவனை கைது செய்து சிறைக்கு கொண்டு போனார்கள்.

அந்த இளைஞன் தான் 'நாதுராம் கோட்சே' என்கிற மாராட்டிய மாநிலத்தைச் சார்ந்த சித்பவன் பார்ப்பனர்!

அதிர்ச்சி அடைந்த நேரு வானொலியில் இவ்வாறு பேசினார்.

"ஒரு பைத்தியக்காரன் காந்திஜியின் வாழ்க்கைக்கு முடிவு கட்டிவிட்டான். நான் அவனை ஒரு பைத்தியக்காரன் என்றுதான் சொல்லுவேன். கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நாட்டில் ஒரு 'விஷம்' பரப்பப்பட்டு வருகிறது. இந்த 'விஷம்' மக்களிடையே பயங்கர விளைவுகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த விஷத்தை நாம் சந்திப்போம், சந்தித்தே தீருவோம்!"

என்று நேரு, காந்தியாரின் உயிரை மாய்த்த அந்த 'விஷத்தை' சுட்டிக்காட்டி அறைகூவல் விடுத்தார். அவர் சொன்ன அந்த ஆலகால விஷம் "ஆர்.எஸ்.எஸ்"!

காந்தியார் மறைவு பற்றிய வரலாறு ஆர்.எஸ்.எஸ். இல்லாமல் முழுமை பெற முடியாது! காந்தியார் உயிரைக் குடித்த சிதபவன் பார்ப்பனர் ஒரு ஆர்.எஸ்.எஸ். காரரே என்பது கல்லில் செதுக்கப்பட்டிருக்கும் உண்மை! ஆனால், கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று இமயமலையை தூணில் மறைக்கும் முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ்.கூட்டம் ஈடுபட்டது. அதையே இப்போதும் செய்து கொண்டிருக்கிறது!

நாம் இந்த பொய்மைத் திரையை கிழித்துக் காட்டப் போகிறோம். உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவரப் போகிறோம்! காந்தியார் கொலைக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் உள்ள தொடர்புகளை பட்டியல் போட்டுக் காட்டப் போகிறோம்.

காந்தியார் இறந்தார் என்ற செய்தி வந்தவுடன் அந்த வாய்ப்பையும் பயன் படுத்திக் கொண்டு, முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தை உருவாக்க முயன்ற கூட்டம் இது. காந்தியாரை சுட்டுக் கொன்றது ஒரு முஸ்லீம் என்ற வதந்தியை திட்டமிட்டுக் கிளப்பினார்கள். ஒரு சில நிமிடங்களிலேயே இந்த வதந்தி காட்டுத்தீ போல பரவிவிட்டது. பல இடங்களில் முஸ்லீம்கள் மீது தாக்குதலும் தொடங்கி விட்டது.

காந்தியார் இறந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து மவுண்ட்பாட்டன் (அன்றைய பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல்) பிர்லா மாளிகைக்கு விரைகிறார். அப்போது வெளியே பெரிய கூட்டம் திரண்டு நிற்கிறது. கூட்டத்தை விலக்கித் தள்ளிக் கொண்டு மவுண்ட்பாட்டன் அவசரமாக நுழையும் போது ஒரு பார்ப்பனன் ஓடிவந்து,

"ஒரு முஸ்லீம் காந்தியைக் கொன்று விட்டான்." என்று அலறுகிறான்.

"முட்டாள்' வாயை மூடு; கொன்றது ஒரு இந்துதான் என்று உனக்குத் தெரியாதா?" என்று ஆத்திரத்தோடு பதிலளிக்கிறார் மவுண்ட்பாட்டன்.

(ஆதாரம்: Freedom at Midnight பக்கம் 440)

அகில இந்திய வானொலியின் டைரக்டருக்கும் - காந்தியாரை சுட்டுக் கொன்றது ஒரு முஸ்லீமே என்று இந்தக் கூட்டம் தகவல் கொடுத்தது. வானொலியில் இப்படி ஒரு செய்தி வந்துவிட்டால், நாடெங்கும் முஸ்லீம்களுக்கு எதிராக கலவரம் வெடிக்கும் என்பது இவர்களின் அற்ப ஆசை! ஆனால், வானொலி இந்தச் செய்தியை நல்ல வேளையாக ஒலி பரப்பவில்லை.

காந்தியாரை சுட்டுக் கொன்றது யார் என்று தெரிந்த பிறகே, அந்தச் செய்தியை ஒலி பரப்பவேண்டும் என்று வானொலி நிலைய அதிகாரிகள் செய்தியை தாமதப் படுத்தினர். காந்தியார் மறைவுக்குப் பிறகும், வானொலியில் தொடர்ந்து வழக்கமான நிகழ்ச்சிகளே ஒலி பரப்பப்பட்டு வந்தன.

பிர்லா மாளிகைக்குத் தொடர்பு கொண்டு செய்தியை உறுதிப்படுத்திய பிறகுதான் வானொலி காந்தியாரின் மறைவை நாட்டுக்கு அறிவித்தது. காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டது மாலை 5 மணி 12 நிமிடம். வானொலியில் அந்தச் செய்தி ஒலி பரப்பானதோ, மாலை ஆறு மணிக்குத்தான்! அதுவும் செய்தி எப்படி ஒலிபரப்பப் பட்டது தெரியுமா?

"காந்தியாரை இன்று மாலை 5.20 மணிக்கு ஒரு இந்து சுட்டுக் கொன்றான்!" என்று சுட்டவன் இந்து என்பதை வலியுறுத்தி செய்தி அறிவிக்கப் பட்டது. இப்படிப்பட்ட நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் யார்? ஆர்.எஸ்.எஸ். என்கிற சதிகாரப் பார்ப்பனர் கூட்டம்தான்!

காந்தியாரின் உதவியாளராக இருந்து, காந்தியார் வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதிய பியாரிலால் தமது நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

"அந்தக் கடிதத்தை ஒரு இளைஞர் எழுதியிருந்தார். ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்.சில் ஈர்க்கப்பட்டு, பிறகு அதிலிருந்து வெறுப்படைந்து வெளியேறியவர் அந்த இளைஞர். ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு, 'காந்தியார் சுட்டுக் கொல்லப்பட இருக்கிறார்' என்ற செய்தி ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 'அந்த இனிப்பான செய்தியை கேட்பதற்கு தயாராக இருங்கள்' என்று சொல்லி இருக்கிறார்கள். பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வானொலிமுன் உட்கார்ந்து கொண்டு, 'அந்த இனிப்பான செய்தி'க்காகக் காத்துக் கொண்டிருந்தனர். செய்தி வந்தவுடன் டில்லி உட்பட பல இடங்களில் இனிப்பு வழங்கினர்." என்று எழுதியிருக்கிறார்.

(ஆதாரம்: பியாரிலால் எழுதிய Mahathma Gandhi the Last phase நூல் பக்கம் 756)

அதே நூலில் அதே பக்கத்தில், இன்னொரு தகவலும் தரப்பட்டிருக்கிறது.

"பிறகு ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட போது இந்திய மாநிலங்களின் தலைநகர் ஒன்றில் இருந்த தலைமை போலீஸ் அதிகாரி, உடனே ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து 13 நாட்கள் துயரம் தெரிவிப்பதாகக் கூறி அலுவலகங்களை மூடிவிட்டு, தலைமறைவாகி விடுங்கள்! தடை உத்தரவை மீற வேண்டாம் என்று அறிவித்தார்."

என்று அந்நூலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது! போலீஸ் அதிகாரியாக இருந்த பார்ப்பனர் ஒருவர் தமது இனத்துக்கு செய்திருக்கிற 'சேவை' இது. காந்தியார் மறைவுக்கு 13 நாள் துக்கம் அறிவித்ததில்கூட இவர்களின் தற்காப்பும் சுயநலமும் அடங்கியிருக்கிறது என்பது இப்போது புரிகிறதல்லவா?

Thansks..Karuppupayan.

0 Comments:

Post a Comment

<< Home