|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, October 08, 2007

பெருமானார் வழியில் பெருநாள் தொழுகை!

னிதனின் உணர்வுகளை மதிக்கும் இஸ்லாம், இரு பெருநாட்களை முஸ்லிம்களுக்கு வழங்கி, அன்றைய தினங்களில் உண்டு களித்து, உடுத்தி மகிழ்வதை அனுமதித்திருக்கிறது. பெருநாள்தினம் எப்படி கொண்டாடப்பட வேண்டும் என்பதையும் இஸ்லாம் வரையறுத்து தந்துள்ளது.

'மஸ்ஜிதுல் ஹராமைத்தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட எனது இந்த பள்ளி(மஸ்ஜிதுந் நபவீ)யில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விட சிறந்ததாகும் எனக்கூறியுள்ள நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகைகளை மட்டும் பள்ளியில் தொழாமல் திடலில் தொழுபவர்களாக இருந்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாளிலும் ஹஜ்ஜூப் பெருநாளிலும் பள்ளியில் தொழாமல் 'முஸல்லா' எனும் மைதானத்திற்கு செல்பவர்களாக இருந்தார்கள் – அறிவிப்பவர் : அபூ ஸயீது அல் குத்ரி (ரலி) - நூல் - புஹாரி.

அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் எந்த விசயத்தில் நன்மைகள் அதிகமோ அதைத்தான் நடைமுறைப்படுத்துவார்கள். அதனடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைகளை திடலில் தொழுதிருக்கும் பொழுது அதை விடுத்து பள்ளியில் தொழுவது நபிவழிக்கு முற்றிலும் மாற்றமானதாகும்.

பெண்கள் வீட்டில் தொழுவதுதான் சிறந்தது. ஆனால், பெண்கள் பள்ளிக்கு சென்று தொழ விரும்பினால் அதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று சொன்ன பெருமானார் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு பெண்கள் உட்பட அனைவரும் திடலுக்கு செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள்.

எந்த அளவிற்கு இதை வலியுறுத்தினார்கள் என்றால், உடுத்துவதற்கு உடையில்லாத பெண்களை அடுத்தவரிடம் உடையை வாங்கி உடுத்தி வரவேண்டும் என்றும், மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண்கள் பெருநாள் தொழுகை நடக்கும் திடலுக்கு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்கள்.

மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண்கள் பள்ளிக்கு வரமுடியாது என்பதாலும், அவர்களும் பெருநாள் தொழுகை நடக்கும் இடத்தில் கலந்து மகிழ்ச்சியை கொண்டாட வேண்டும் என்பதற்காகவுமே நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை பள்ளியில் நடத்தாமல் திடலில் நடத்தி காட்டியுள்ளார்கள்.

நாங்கள் இரு பெருநாட்களிலும் தொழும் இடத்திற்கு செல்வதை விட்டும் எங்கள் குமரிப்பெண்களை தடுத்துக்கொண்டிருந்தோம். அப்போது உம்மு அதிய்யா(ரலி) அறிவித்ததாக அவரது சகோதரி கீழ்க்கண்ட செய்தியை எங்களுக்கு அறிவித்தார்கள்.

நாங்கள் போர்களத்தில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்போம், நோயாளிகளை கவனிப்போம். நான் நபி (ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்கு) செல்லாமல் இருப்பது குற்றமா என்று கேட்டேன், அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவளது தோழி தனது உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களுடைய பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும் என்று கூறினார்கள், என்று உம்மு அதிய்யா (ரலி) அறிவித்த செய்தியை அவரது சகோதரி என்னிடம் கூறினார்.

உம்மு அதிய்யா (ரலி) என்னிடம் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா? என்று நான் கேட்டேன், அதற்கு உம்மு அதிய்யா (ரலி) என் தந்தை அர்ப்பணமாகட்டும் ஆம்! நான் கேட்டேன். கன்னிபெண்களும் மாதவிடாய் பெண்களும் (பெருநாள் அன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களுடைய பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்கு செல்லும் மாதவிடாய் பெண்கள்,தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருப்பார்கள், என்று கூறினார்கள்.

இதைக்கேட்ட நான் மாதவிடாய் பெண்களுமா? என்று கேட்டபோது, மாதவிடாயுள்ள பெண்கள் அரபாவிலும் மற்ற (மினா, முஜ்தலிபா போன்ற) இடங்களுக்கெல்லாம் செல்வதில்லையா? என்று உம்மு அதிய்யா(ரலி) கேட்டார்கள். அறிவிப்பவர் : ஹப்ஸா (ரலி). நூல் : புஹாரி

எனவே மேற்கண்ட ஹதீஸிலிருந்து பெண்கள் உட்பட அனைவரும் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், பெருநாள் தொழுகையை திடலில் தொழுவது தான் நபி (ஸல்) அவர்களின் வழி என்பதையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

அதுபோல், நோன்புப் பெருநாளில் காலை உணவு உண்ட பின் தொழுகைக்கு செல்வதும், ஹஜ்ஜூப் பெருநாளில் தொழுத பின்பு உணவு உண்ணுவதும் நபி (ஸல்) அவர்களின் வழியாகும்.

பெருநாள் தொழுகையில், தொழுகைக்கு பின்பு தான் குத்பா எனப்படும் சொற்பொழிவு நிகழ்த்தப்படும். தொழுதுவிட்டு அந்த சொற்பொழிவையும் கேட்டால் மட்டுமே தொழுகை நிறைவேறும். ஏனென்றால், மாதவிடாய் பெண்கள் வரை இந்த சொற்பொழிவை கேட்க வர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதால் இதன் முக்கியத்துவத்தை விளங்கி பெருநாளை அனைவரும் பயனுள்ளதாக்கி நன்மை அடைவோம்.

- முஹம்மது மாஹீன்

0 Comments:

Post a Comment

<< Home