|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, November 12, 2007

இசையினால் இன்னலே! இறை நினைவால் இன்பமே!!


இயந்திரமயமாகி விட்ட மனித வாழ்க்கையில் மக்கள் தமது வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு மனம் நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக டி.வி. பார்ப்பது, இசை கேட்பது, இன்னும் இது போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இசை தான் மனதுக்கு அமைதியைத் தந்து, கவலைகளை மறக்கச் செய்யும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இசை கேட்கும் போது அது ஒரு பொழுது போக்காகவும், உற்சாகத்தைத் தூண்டுவதாகவும் இருக்கின்றது; எனவே இசை அமைதியளிக்கின்றது; மகிழ்ச்சியைத் தருகின்றது என்று எண்ணுகின்றார்கள். அதனால் தான் தங்களுக்கு ஏதேனும் மன இறுக்கம் ஏற்படும் போது அல்லது சலிப்பு ஏற்படும் போது இசை கேட்க விரும்புகின்றார்கள்.

இசை நம்முடைய உடலுக்கும் உள்ளத்திற்கும் அமைதி, ஓய்வைத் தருகின்றது என்ற எண்ணம் பரவலாக இருந்து வருவதும் இதற்குக் காரணம்.

பெண்களும் கூட வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது வேலையில் சிரமம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இசையைக் கேட்டுக் கொண்டே வேலை செய்வார்கள். இதில் யாரும் விதிவிலக்கல்ல. மார்க்கம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருமே இந்த இசையில் மூழ்கியுள்ளனர்.

இந்த இசையைக் கேட்பதால் மனம் நிம்மதியடையுமா? என்றால் நிச்சயம் இல்லை. மாறாக இசையைக் கேட்பதால் நரம்புகள் பாதிப்படைதல், தூக்கமின்மை, அமைதியின்மை ஆகியவை தான் ஏற்படுகின்றன.

இசை கேட்கும் போது மனித உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கின்றது என்பதை சமீபத்தில் ஓர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். அட்ரினலின் என்ற ஹார்மோன் பொதுவாக ஏதாவது மன இறுக்கம் ஏற்படும் போதோ அல்லது சாதாரண நிலைகளிலோ சிறிதளவு தான் உற்பத்தியாகின்றது.

இசை கேட்கும் போது அட்ரினலின் தொடர்ந்து உற்பத்தியாகின்றது. அட்ரினலின் அதிகமாக உற்பத்தியாவதால் மனித உடலில் ஒரு பரபரப்பும், அமைதியின்மை, தூக்கமின்மை போன்றவையும் ஏற்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இதனால் மேலும் பல தீமைகள் ஏற்படுகின்றன.

இசை கேட்பது மனதுக்கு நிம்மதி அளிக்காது. மாறாக அமைதி யின்மையை ஏற்படுத்தும். இறைவனை நினைவு கூர்வது தான் மனதுக்கு அமைதியைத் தரும். பாவமான, மானக்கேடான காரியங்களை விட்டும் தடுக்கும்.

(முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (29:45)

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (13:28)

இறைவனை நினைவு கூர்வதால் தான் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன என்று அல்லாஹ் கூறுகின்றான். மேலும் நாம் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் அவனும் நம்மை நினைவு கூர்கின்றான்.

என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்! (2:152)

நாவுக்கு இலேசானது தராசில் கனமானது
இன்று ஆண்களாயினும் பெண்களாயினும் அவர்கள் எந்த நேரமும் வாயில் நுழையாத, இரட்டை அர்த்தங்கள் கொண்ட பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்கின்றார்கள். அந்தப் பாடல்களை எப்படியாவது பாடியே ஆக வேண்டும் என்பதற்காக அவற்றைக் கேட்டு, மனப்பாடம் செய்து பாடிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு வாயில் நுழையாத, இரட்டை அர்த்தங்கள் கொண்ட பாடல்களைப் பாடி தீமையைச் சேர்ப்பதை விட மிகவும் சிறந்த இரண்டு வார்த்தைகளைச் சொல்வது நாவுக்கு மிகவும் எளிதானது. மறுமையில் மீகான் எனும் தராசினைக் கனமாக்குவதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை; நாவுக்கு எளிதானவை; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். அவை:

1. சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்)

2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7563

சுப்ஹானல்லாஹில் அழீம் என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: திர்மிதீ 3464

வார்த்தைகளில் சிறந்தது

நபி (ஸல்) அவர்களிடம், ''வார்த்தைகளிலேயே சிறந்தது எது?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''மலக்குமார் களுக்கும், தன்னுடைய அடியார் களுக்கும் 'சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என்ற வார்த்தையை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2731

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ''அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தையை அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டு விட்டு, ''அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான வார்த்தை, சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4911

பாவங்கள் மன்னிக்கப்பட...

நாம் நம்மையும் அறியாமல் எத்தனையோ சிறு சிறு தவறுகளைச் செய்கின்றோம். இன்னும் சில நேரங்களில் அந்தச் சிறு தவறுகளை நாம் தவறு என்று தெரிந்து செய்கின்றோம். ஆனால் அதன் விளைவை நாம் பெரிதாக எண்ணுவதில்லை. மிகவும் சாதாரணமானது என்று நினைக்கிறோம். ஆனால் நம்முடைய பதிவேடு அதையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் பதிவு செய்து விடும்.

பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! ''இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!'' எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான். (18:49)

தூய்மையான எண்ணத்துடன் 'சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என்று ஒரு நாளைக்கு நூறு முறை கூறினால் நம்முடைய பாவங்கள் கடலின் நுரையளவு இருந்தாலும் அதை அல்லாஹ் மன்னித்து விடுவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப் பட்டு விடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (அதிகமாக) இருந்தாலும் சரியே!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6405

செல்வந்தர்களின் அந்தஸ்தை அடைய...

பணம் இருக்கும் செல்வந்தர்களில் அதிகமானவர்களுக்குக் கொடுக்க மனம் இருக்காது. பணம் இல்லாத ஏழைகளிடம் கொடுக்க வேண்டும் என்ற மனம் இருக்கும். இன்னும் சிலரோ தங்களுக்குக் கிடைக்கும் செல்வத்தை வீண் விரயம் இல்லாமல் செலவழித்து, அதில் மீதம் இருப்பதைத் தர்மம் செய்து விடுவார்கள். என்றாலும் இவர்களது எண்ணம் இன்னும் அதிகமாகத் தர்மம் செய்ய வேண்டும் என்றே இருக்கும்.

தர்மம் செய்பவர்களைப் பார்க்கும் ஏழைகளுக்கு, இது போன்று நமக்கும் செல்வம் தரப்பட்டால் நாமும் தர்மம் செய்து அதிக நன்மைகளைப் பெறலாமே! இவர்கள் மட்டும் அதிகமான நன்மைகளைப் பெறுகிறார்களே! என்று நினைப்பார்கள்.

இது போலத் தான் சத்திய ஸஹாபாக்களும் வருத்தப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த திக்ருகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

ஏழைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் தொழுவது போன்று அவர்களும் தொழுகின்றார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போன்றே அவர்களும் நோன்பு வைக்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர். உம்ரா செய்கின்றனர். அறப்போர் செய்கின் றனர். தர்மமும் செய்கின்றனர் (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடியவில்லை)'' என்று முறையிட்டனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகின்றேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்தி விட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கிறீர்களோ அவர்களும் அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவர்கள் ஆவீர்கள். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் 33 தடவை இறைவனைத் துதியுங்கள். 33 தடவை இறைவனைப் புகழுங்கள். 33 தடவை இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்'' என்று கூறினார்கள்.

நாங்கள் இவ்விஷயத்தில் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர் சுப்ஹானல்லாஹ் 33 தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும், அல்லாஹு அக்பர் 34 தடவையும் கூறினோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று 33 தடவை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 தடவைகள் கூறியதாக அமையும்'' என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 843

ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு

நபி (ஸல்) அவர்கள் ஷைத்தானைப் பற்றிக் கூறும் போது மனிதர்களின் இரத்த நாளங்களில் ஓடுவதாகக் கூறுகின்றார்கள். இந்த ஷைத்தான் மனிதர்களை வழி கெடுப்பதற்கு ஏதேனும் ஒரு சிறு வழியேனும் கிடைக்காதா? என்று தேடிக் கொண்டேயிருக்கின்றான். இந்த ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு கிடைக்க வேண்டுமெனில் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு வழியைக் கற்றுத் தருகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

''லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சி அதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமை உள்ளவன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கின்றாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். நூறு தவறுகள் அவரது கணக்கிலிருந்து அழிக்கப்படும். மேலும் அடுத்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும் அவர் புரிந்த நற்செயலை விட சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது. ஒருவர் இதை விட அதிகமான ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6403

அல்லாஹ்வை நினைவு கூராத மனிதனை நபி (ஸல்) அவர்கள் இறந்தவனுக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகின்றவனின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கும் ஒத்திருக்கின்றது.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: புகாரி 6407

அல்லாஹ்வை நினைவு கூர்வதன் சிறப்பு

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (33:35)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுபவர்களைத் தேடிய வண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரைக் கண்டால் 'உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்' என்று அவர்கள் தம்மில் ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகின்றவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர்.

அப்போது அவ்வானவர்களிடம் அவர்களுடைய இறைவன், ''என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?'' என்று கேட்கிறான். அந்த வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கு அறிந்தவன் ஆவான். ''அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறித் துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றனர்'' என்று வானவர்கள் கூறுவார்கள்.

அதற்கு இறைவன், ''அவர்கள் என்னைப் பார்த்திருக்கின்றார்களா?'' என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ''இல்லை. உன் மீது ஆணையாக அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை'' என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ''என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?'' என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ''உன்னைப் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள். இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்'' என்று பதிலளிப்பார்கள்.

அதற்கு இறைவன், ''அவர்கள் என்னிடம் எதை வேண்டுகிறார்கள்?'' என்று தனக்குத் தெரியாதது போல் கேட்பான். ''அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கிறார்கள்'' என்று வானவர்கள் கூறுவர். ''அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?'' என்று இறைவன் கேட்பான். ''இல்லை. உன் மீது ஆணையாக! அதிபதியே! அவர்கள் அதைப் பார்த்ததில்லை'' என்று வானவர்கள் கூறுவர். அதற்கு இறைவன், ''அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்களின் நிலை எப்படியிருக்கும்?'' என்று கேட்பான். ''அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசை கொண்டு அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்'' என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்.

''அவர்கள் எதிலிருந்து என்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றனர்?'' என்று இறைவன் வினவுவான். ''நரகத்திலிருந்து பாதுகாப்புக் கோருகின்றனர்'' என்று வானவர்கள் பதிலளிப்பார்கள். ''அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?'' என்று இறைவன் கேட்பான். ''இல்லை. உன் மீது ஆணையாக அவர்கள் அதைப் பார்த்ததில்லை'' என்று வானவர்கள் கூறுவர். அதற்கு இறைவன், ''அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்களின் நிலை என்னவாக இருக்கும்?'' என்று கேட்பான். ''அவர்கள் நரகத்தைப் பார்த்திருந்தால் நிச்சயமாக அதிலிருந்து கடுமையாக வெருண்டு ஓடுபவர்களாகவும், அதை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்'' என்று வானவர்கள் பதில் கூறுவர்.

அப்போது இறைவன், ''ஆகவே அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சியாளர்களாக ஆக்குகின்றேன்'' என்று கூறுவான்.

அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், ''(இறைவனைத் துதிக்கும் குழுவிலிருந்த) இன்ன மனிதன் உன்னைப் போற்றுகின்ற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ வேலை நிமித்தமாகவே அங்கு வந்தான்'' என்று கூறுவார். அதற்கு இறைவன், ''அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர) பாக்கியமற்றவனாக ஆக மட்டான்'' என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6408

இத்தனை சிறப்புகளையும் நன்மைகளையும் கொண்ட இந்த திக்ருகளைத் துதிக்க வேண்டிய நாவுகள் இன்று நம்மைத் தீமைக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றன. பாவத்தைச் சேர்க்கக் கூடிய, இரட்டை அர்த்தங்கள் கொண்ட பாடல்களைத் துதித்துக் கொண்டிருக்கின்றன.

இனியாவது இது போன்ற பாடல்களை ஒதுக்கி விட்டு, நன்மையைச் சேர்க்கக் கூடிய திக்ருகளை அதிகமதிகம் துதிப்போமாக! நமது பிள்ளைகளையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் தீய பாடல்களைப் பாடுவதை விட்டும் தடுத்து, இறைவனை அதிகமாக நினைவு கூரக் கூடியவர்களாக ஆக்குவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

Thanks...WWW.PTJAMATH.COM

0 Comments:

Post a Comment

<< Home