|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, July 30, 2007

இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் - (PART-1)

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். ஷைத்தானுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றாதீர்கள் ஏனெனில், அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி ஆவான்: குர்ஆன்2:208

அல்லாஹ் கூறும் மேற்கானும் திருமறை வசனம் கூறும் எச்சரிக்கை அறிவிப்பை ஒருப் பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டதனால் இன்று மற்ற சமுதாயங்களை விட முஸ்லிம் சமுதாயத்தில் தீமைகள் மிகைத்து விட்டது.

குடியிருப்புகளை மேடானப் பகுதிக்கு மாற்றிக் கொள்வார்கள்.
அரசு தரப்பில் ஒரு அறிவிப்பு வரும் எவ்வாறெனில், தாழ்வானப் பகுதிகளில் குடியியிருப்போர் மேடானப் பகுதிகளுக்கு உங்கள் குடியிருப்பை மாற்றிக்கொள்ளுங்கள் கடல் கொந்தளிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று அறிவிப்பார்கள். இந்த அறிவிப்பைக் கேட்ட மாத்திரத்தில் மிண்ணல் வேகத்தில் தங்களது குடியிருப்புகளை மேடானப் பகுதிக்கு மாற்றிக் கொள்வோம். கடல் கொந்தளித்து வேறு ஒரு பகுதியின் குடியிருப்புகளை தாக்கி அங்குள்ளவர்களை சுருட்டிக் கொண்டு சென்று விடும். சில நேரம் அவ்வறிவிப்பு சரியாகவும் அமைந்து விடும். இவ்வறிவிப்பைக் கேட்ட மாத்திரத்தில் ஏன் இவ்வாறு அசுர வேகத்தில் செயல்பட்டு தமது குடியிருப்பை மாற்றிக் கொள்கிறோம் ? அரசு தரப்பில் வெளியிடுகின்ற இதுபோன்ற அறிக்கைகள் பெரும்பாலும் சரியாக அமைந்து விடும் என்ற நம்பிக்கையே முக்கிய காரணமாகும்.

அவ்வாறு நம்புவதற்கு ஒரு காரணமும் உண்டு வானிலை ஆராய்ச்சிக்கென அரசு ஒருக் குழுவை நியமித்து அதற்கு சம்பளம் கொடுத்து அரசு பணியாளர்களாக நிரந்தரமாக நியமித்திருப்பார்கள் அவர்கள் துல்லியமாக ஆராய்ந்து தரப்படுகின்ற தகவல்களின் அடிப்படையில் அரசு அறிவிப்பதால் அதை நம்பிவிடுகிறோம் அதனால் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக பல லட்சங்களை கொட்டி வடிவமைக்கப்பட்ட பங்களாக்களை உதறி தள்ளி விட்டு உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒருசில நிமிடங்களில் இடம் பெயர்ந்து கொண்டு ஓடி விடுகிறோம்.

எந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்தளவுக்கு ஓடுகிறோமோ அந்த உயிர் நமது உடலின் மீது ஏவப்பட்டதற்கும், குறிப்பிட்ட தவனையில் மீண்டும் அதை பிரித்து விடுவதற்கும் அதிகாரம் படைத்த ஏக இறைவன்; ஷைத்தானுடைய அடிச்சுவட்டை பின்பற்றாதீர்கள ஏனெனில், அவன் உங்களுக்கு பகிரங்க விரோதியாவான் என்றுக் கூறியதை எச்சரிக்கை அறிவிப்பாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டோம்.

ஷைத்தானின் சபதம்
அல்லாஹ் மனித சமுதாயத்தைப் படைக்க எண்ணி அதனடிப்படையில் முதல்மனிதர் ஆதம் (அலை) அவர்களை சிருஷ்டித்தான் அவர்களை சிருஷ்டித்து முடித்தப்பின் அவருக்கு இப்லீஸை (ஷைத்தானை) சாஷ்டாங்கம் செய்ய ஏவினான் அதற்கு ஷைத்தான் மறுத்து விடுகிறான். அல்லாஹ்வுடைய கட்டளை மறுக்கப்பட்டதால் அல்லாஹ் ஷைத்தான் மீது கோபம் கொண்டு அங்கிருந்து வெளியேறும்படி கூறிவிடுகிறான். ஆவன் அங்கிருந்து வெளிNறுவதற்கு முன் அல்லாஹ்விடம் ''என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். 15:39 . என்றுக் கூறுகிறான் அதற்கு அல்லாஹ் ''நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர'' என்று கூறினான். 15:42 . நிச்சயமாக (உன்மைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும். 15:43

மேற்கனானும் அல்லாஹ்வுக்கும், ஷைத்தானுக்குமிடையே நடந்த பகிரங்க உரையாடலை அல்லாஹ் தன்னுடைய தூதர் மூலமாக உலக மக்கள் அனைவருக்கும அறிவித்து விடுகிறான் இவ்வாறு அறிவிப்பதற்கு என்ன காரணம் ? மனிதனே உனக்கு சாஷ்டாங்கம் செய்யச் சொன்னதால் என்னை எதிர்த்தான், எதிர்தததோடல்லாமல் உன்னுடைய மொத்த வழித் தோன்றலையும் வழி கெடுப்பதாக கூறுகிறான் சுதாரித்துக்கொள் என்பதாகும்.

பெற்ற மகனே மீறும் பொழுது ?
உதாரணத்திற்கு உங்களில் ஒருவர் அல்லாஹ்வை பின்பற்றியொழுகக் கூடியவராகவும் அத்துடன் மக்களை நன்மையை ஏவி , தீமையை தடுக்கும் அரும் பணியில் ஈடுபடும் அழைப்பாளராகவும் இருக்கிறீர்கள். ஒருநாள் உங்கள் ஊரில் பகிரங்கமான வழிகேட்டில் ஈடுபடும் ஒருவரிடம் உபதேசம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் உபதேசம் செய்யப்படுபவர் உங்களுடைய உபதேசத்தை புறக்கனிப்பதுடன் எனது வழியில் உனது மகனையும் ஈடுபடுத்திக் காட்டுகிறேன் என்று சபதம் செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், இப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள் ? ஓடோடி வந்து தனது மகனிடம் நடந்தவைகளை எடுத்துச்சொல்லி மேல்படி வழிகேடனுடைய இடத்திற்கு அறவே செல்லாதே என்றும் கூறுகிறீர்கள் சரி என்று ஏற்றுக் கொண்ட உங்களது மகன் ஒருநாள் அவனுடன் இஸ்லாம் தடைசெய்த ஒரு ஒழுக்கக் கேட்டில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் கண்ணுற்றால் என்ன செய்வீர்கள் ?

அவன் மீது கோபம் வருமா ? வராதா ?
வரும் !
ஏன் வருகிறது ?

பெற்றோம் வளர்த்தோம் என்கிற உரிமையின் காரணத்தால் உங்களுக்கு கோபம் வருகிறது அதுவும் அவனுக்கு உயிர் கொடுத்து இவ்வுலகுக்கு வருவதற்கு நீங்கள் காரணமாக இருக்கவில்லை அல்லாஹ்வே காரணமாவான் தந்தை – மகன் என்ற உறவின் காரணத்தால் அவன் மீது உங்களுக்கு சாட்டப்பட்ட பொறுப்பின் காரணத்தால் உங்களுக்கு கோபம் வருகிறது அதனால் அவனின் மீது அத்து மீறுவீர்கள் அதிலும் குறிப்பாக மேல்படி வழிகேடன் உங்களிடம் செய்த சபதத்தை நீங்கள் உங்கள் மகனிடம் சொல்லிக் காட்டி இருக்க வில்லை என்றால் உங்களுக்கு அவ்வளவு கோபம் வராது விபரம் தெரியாமல் போய் அவனுடைய சதிவலையில் வீழ்ந்து விட்டான் அதனால் அவனை அந்த வழிகேடனின்; சதி வலையிலிருந்து மீட்டெடுத்து விடுவோம் என்று நினைத்து அவனுடைய பிடியிலிருந்து அவனை வெளிக்கொண்டு வர முயற்சிப்பீர்கள், ஆனால் இங்கு நிலமை அவ்வாறில்லை அவனை வழிகெடுத்தவன் உங்களிடமே சொல்லியும் விடுகிறான் நீங்களும் அதை மறைத்து வைக்காமல் வெளிப்படையாக கூறியும் விடுகிறீர்கள் உங்களிடமிருந்து செவியுற்றப் பிறகு அவனுடன் இவனை வழிகேட்டில் இருக்கும் போது காண்கிறீர்கள் இதனால் உங்களுடைய கோபம் உங்கள் மகன் மீது நீங்கள் தந்தை என்பதாலும் நீங்களே உலகில் அவனது பொறுப்பாளி என்பதாலும் இரட்டிப்பாகி விடுகிறது.

...நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை; அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான். 11:12. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து படைப்புகளின் மீது மாபெரும் பொறுப்பாளனாகிய ஏக இறைவன் மனித இனத்தை படைத்து மற்ற எல்லா ஜீவராசிகளையும் விட மனித இனத்தை ஒழுங்குப படுத்தி, அழகான உருவமாக ஆக்கி அவர்கள் சுகமாக வாழ்வதற்காக இப்பிரபஞ்சம் உருவாக்கப்பட்டு, அதில் அவர்கள் புசித்து களைப்பாறுவதற்காக தாவரவியல் ஏற்படுத்தி, மன அமைதி பெறுவதற்காக ஆணிலிருந்தே பெண்ணைப் படைத்து ஆணிலிருந்து படைக்கப்பட்ட பெண்ணை அவன் மணம் கவருவதற்காக அவனை விட இவளை அழகாக்கி அவளை இவனுக்கு துனையமக்கிக்கொடுத்த ஏக இறைவன் ஷைத்தானுடைய அடிச்சுவட்டை பின்பற்றாதீர்கள், என்றுக் கூறியதை ஒரு எச்சரிக்கை அறிவிப்பாக எடுத்துக் கொள்ளாத காரணத்தால் அல்லாஹ்வுடைய கோபம் மனித சமுதாயத்தின் மீது இறங்கி அழிவை ஏற்படுத்துகிறது.

அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர ஷைத்தான் இறைவனிடம் கூறியவிதம் பெரும்பாலான மக்களை வழிகெடுத்துக் கொண்டு இருக்கிறான்.
ஆனால் ஒருக் கூட்டத்தாரிடம் மட்டும் இவனுடைய பாச்சா பலிக்கமால் வெருண்டோடினான் இவனை அவர்கள் ஓட ஓட விரட்டினார்கள்.

யார் அந்தக் கூட்டம் ?

எதனால் அவர்களைக் கண்டு இவன் ஓடினான் ?

இவனை அவர்கள் விரட்டி அடிப்பதற்கு எது ஆயுதமாக இருந்தது ?

இன்று அது நம்மிடம் இருக்கிறதா ? இல்லையா ?

அல்லாஹ் நாடினால் அடுத்து எழுதுவோம்.

மேலும், நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து தடுப்பபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

0 Comments:

Post a Comment

<< Home